சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
PIONEER MISSIONARY
தனியார் நிறுவனம் ஒன்றில் நான் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, ஊழியம் செய்யவேண்டும் என்ற விருப்பம் மனதில் உண்டானது. இந்த விருப்பத்தை மனதில் கொண்டவனாக, தொடர்ந்து பணிக்குச் சென்றுகொண்டிருந்தேன். ஒருநாள், காலைப் பொழுதில், அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்தபோது, ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரில் அதிகம் காலையிலும், மாலையிலும் அதிகம் விற்பனையாகும் வைர கற்களைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு உண்டானது. இணையதளங்களில், 'GEMS' எனக் குறிப்பிட்டு நான் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, 'GEMS' (Gospel Echoing Missionary Society) எனது கண்ணில் பட்டது. அவ்விணையதளத்திற்குள் நான் நுழைந்தபோது, அது ஒரு மிஷனரி ஸ்தாபனம் என்பதையும், அங்குள்ள தொழிற்பயிற்சி மையத்தில் (ITI) நான் பணிசெய்துகொண்டே ஊழியம் செய்யலாம் என்பதையும் அறிந்துகொண்டேன். அதனைத் தொடர்ந்து, 2002-ம் ஆண்டு, நவம்பர் மாத இறுதியில் பீஹாரிலுள்ள ஜெம்ஸ் வளாகத்திற்கு வந்து சேர்ந்தேன்; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்துவிட்டு, அவரிடமிருந்து பதில் ஏதும் பெறாமல், விருந்தினர் அறையில் தொடர்ந்து தங்கியிருந்தேன். மீண்டும், ராஜஸ்தான் செல்லும் விருப்பம் உண்டாகிவிடக்கூடாது என்பதை உணர்ந்தவனாக, ஒருநாள் மாலைப் பொழுதில் டெஹ்ரி ஆன் சோன் நகருக்குச் சென்ற நான், அங்கிருந்து எனது ராஜினாமா கடிதத்தை நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தேன். தனியாக, விருந்தினர் அறையில் தங்கியிருந்த நான் கிடைத்த நேரங்களிலெல்லாம் கவிதைகளை எழுதி; அதனை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருக்கும் அவ்வப்போது கொடுத்துவந்தேன். எனது அழைப்பினைக் குறித்தும் சகோதரருடன் அதிகமாகப் பேசுவதற்கு காத்திருந்த நான், ஆங்காங்கே சகோதரரைச் சந்திக்கும்போது வணக்கம் மாத்திரம் செலுத்தி விடைபெற்றுவந்தேன்.
ஒருநாள் காலை சுமார் 10 மணிக்கு சகோதரரின் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது; சந்திக்கும்படிச் சென்றேன். என்னை அமரச் சொல்லியவாறு, எனது காரியங்களைக் குறித்துப் பேசத்தொடங்கினார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் எனது அழைப்பினையும், வாலிபர் மீதான தாகத்தையும் சகோதரரிடன் முடிந்தவரை எடுத்துரைத்தேன். யோனா கப்பலிலிருந்து வெளியே வீசப்பட்டதுபோல, உலகப் பணியிலிருந்து நான் வெளியேறும் வேளை வந்துவிட்டது என்பதையும், விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய் (எசே 3:5) என்று கர்த்தர் எனக்குத் தந்த அழைப்பின் வசனத்தையும் குறிப்பிட்டுக் காட்டினேன். உரையாடலுக்கு இடையில், 'நீங்கள் ஒரு Pioneer Missionary' என்று என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது' என்று சொல்லியவாறு ஜெபிக்கத் தொடங்கினார், 'ஆண்டவரே, இவரைக் கொண்டு புதிய காரிங்களைச் செய்யும்' என்ற வார்த்தை சகோதரரின் ஜெபத்தில் அழுத்தமான சத்தமாய் தொனித்தது. பேசி முடிந்ததும், விருந்தினர் விடுதியில் மீண்டும் காத்திருக்கும்படி சகோதரர் சொல்ல, அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது, அப்போதைய ஜெம்ஸ் மாணவர் ஊழியத்தின் பொறுப்பாளர் சகோதரர் ஐசக் எனது அறைக்கு வந்தார். சகோதரர் என்னைச் சந்திக்க அனுப்பியதாக தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அலுவலகப் பணியோடு, ஊழியப் பணியினையும் செய்யும் அழைப்பு என்னுடையது என்று நான் சொன்னபோது, சகோ.ஐசக் என்னை முழு நேரமாக மாணவர் ஊழியத்தில் ஈடுபடுத்த விரும்பாதிருந்தார். அதனைத் தொடர்ந்து, சகோதரரின் நடத்துதலின்படி ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஊழியத்தைத் தொடர்ந்தேன்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக