சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
குடும்பமா? தேவனா? ஊழியமா?
அது ஒரு காலை நேரம்; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்கள், குடும்பம், ஆவிக்குரிய குடும்பம், அழைக்கப்பட்டவர்கள் மற்றும் 100% தேவப் பணிக்காகவே வாழ்நாளை தத்தம் செய்துவிட்டவர்கள் என்று குறியிட்டு எழுதினார். அத்துடன், ஏழாவது வட்டத்திலிருப்பவர்கள், இவ்வுலகில் அனைத்தையும் துறந்து அவருக்காகவே மட்டும் வாழ்பவர்கள் என உயர்த்திக் காட்டினார். அழைக்கப்பட்ட நீங்கள் உங்களைச் சுற்றியிருக்கும் வட்டங்களையும், நீங்கள் இருக்கும் வட்டத்தையும் அறிந்திருக்கவேண்டும் என்றார். தொடர்ந்து, (படம்-2) ஓர் முக்கோணத்தை வரைந்து, அதன் முனைகளில் ஊழியம், குடும்பம், தேவன் என்று எழுதி, ஊழியத்தையும், தேவனையுமே கவனித்துக்கொண்டிருந்தால், குடும்பம் அனாதையாக்கப்பட்டுவிடும், நம்முடைய வேகத்திற்கு குடும்பம் ஒத்துழையாமலிருக்கலாம் என்றாலும், குடும்பத்தையும் ஊழியத்தில் கூடவே கூட்டிக்கொண்டு தேவனை அடையும்படிக்கே திருமணமானோர் அழைக்கப்பட்டவர்கள் என்றார். அத்துடன், 'எனக்குக் குறிக்கப்பட்டதை அவர் நிறைவேற்றுவார்” (யோபு 23:14) என்ற வசனத்தைக் குறிப்பிட்டு, உங்களைக் கொண்டு செய்வேன் என்று தேவன் சொன்னவைகளை, உங்கள் மரணத்திற்குப் பின்னும் மற்றவர்களைக் கொண்டும் தேவன் செய்து முடிப்பார்; எனினும், தரிசனம் உங்களுடையதே. Life term vision, Long term vision – ஐ நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, உங்கள் வாழ்நாட்களுக்குள் அனைத்தும் நிறைவேற்றப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குள் நீங்கள் காணப்படக்கூடாது. ஜெம்ஸ்-ல் இன்னும் நிறைவேறவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; என்றாலும், அவைகள் அனைத்தும் என் வாழ்நாளுக்குள் நிறைவேறிவிடவேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியுமா? நான் தரிசனத்தைப் பெற்றது உண்மைதான், ஆனால், அவைகளில் என் காலத்திற்குப் பின் நிறைவேறுபவைகளும் உண்டு என்றார். மேலும், (படம்-3) தேவனுக்கு முன் உத்தம ஊழியனாக, நண்பர்களுக்கு உற்ற நண்பனாக, மனைவிக்கு உண்மையான கணவனாக மற்றும் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக ஆற்றவேண்டிய கடமையும்; அத்துடன், (படம்-4) ஆவிக்குரிய வாழ்க்கையில், தேவ சித்தத்தைச் செய்கிறவனாகவும், அழைப்பை நிறைவேற்றுகிறவனாகவும், குடும்பத்திற்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் செய்யவேண்டிய கடமையில் தவறாதவனாகவும், பொறுப்புகளில் பிசகாதவனாகவும் வாழவேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தார். முதிர்ந்த அவரிடமிருந்து உதிர்ந்த இப்பழங்களைப் பொறுக்கிய நான், பகிர்ந்து தருகிறேன பங்கிலே நீங்களும் சுவைக்க.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக