சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
கறையான அக்கரை
31 March 2014
ஜார்க்கண்ட் மாநிலம் அம்பிகாபூர் என்னுமிடத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களின்போது நடைபெற்ற நிகழ்வு இது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கூட்டங்களுக்கு வருவதற்கு முன்பே முன் ஏற்பாடுகளில் உதவி செய்ய ஜெம்ஸ் மீடியா துறையினருடன் நானும் அம்பிகாபூர் சென்றிருந்தேன். வழியில் பேருந்திலேயே மீன் பொறியல், பிரட் ஆம்லேட், சமையல் என எங்கள் வயிற்றுப் பசியை எங்கள் கரங்களே ஆற்றியது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஸ்டீபன், மற்றும் பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த சகோதரர் ஆரோன் அவர்களும் அக்கூட்டங்களுக்கு எங்களுடன் வந்திருந்தனர். சகோதரர்களில் சிலர் தங்குவதற்கென ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இடங்களுக்குச் சென்று தங்கினர்; எனினும், மைதானத்தில் உள்ள பொருட்களுக்கும், ஜெனரேட்டர் பேருந்திற்கும் பாதுகாப்பு கருதி, நானும், சில சகோதரர்களுமோ மைதானத்திலேயே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தோம்; சமையல் பாத்திரங்களை உடன் கொண்டு சென்றிருந்ததால் விரும்பிய உணவை மைதானத்திலேயே சமைத்துச் சாப்பிட்டு வந்தோம். கூட்டம் தொடங்கும் நாளன்று சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அம்பிகாபூர் வந்து சேர்ந்தார்; ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜதுரை சகோதரரின் வாகனத்தை ஓட்டிவந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், சகோதரரை அழைக்கும்படியாக நான் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றிருந்தேன். அறையில் நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வயற்றுப் போக்கால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்; அறையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருடன் இருந்த சகோதரர் ராஜதுரை சில மருந்துகளை சகோதரருக்குக் கலக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். இன்று பிரசங்கம் செய்ய முடியுமா? என்ற நிலையில் அவரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம், ஆடையை அணிந்து கூட்டத்திற்குச் செல்ல ஆயத்தமானார் சகோதரர். அவருடன் நானும் காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். உடலின் பெலவீனம் எள்ளளவும் வெளிப்படாமல், பெலமாய் வெளிப்பட்டது கர்த்தருடைய வார்த்தை. பிரசங்கம் முடிந்ததும், விரு விரு என மேடையை விட்டு இறங்கினார் சகோதரர்; வாகனத்தில் தங்குமிடத்திற்குப் புறப்பட்டார்; நானும் அவருடன் புறப்பட்டேன். தங்கும் அறைக்குச் சென்றதும், வேதாகமத்தை வைத்துவிட்டு அப்படியே பாத்ரூம் நோக்கிச் சென்றார். இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்த சகோதரரிடம், 'அண்ணன் உங்கள் உடல் நிலை சரியில்லையே, பிரசங்கத்தைத் தவிர்த்திருக்கலாமே, ஓய்வெடுத்திருக்கலாமே' என்று நான் மெல்ல வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருந்தபோது. நான் வருவேன் என்று எத்தனையோ பேர் ஆவலுடன் வந்திருப்பார்கள்; அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிப்போக எனக்கு மனமில்லை என்றார். ஆத்துமாக்களின் மேல் அவருக்கு இருந்த அக்கரை, என் மனதிலும் அன்று கறையாய் படிந்தது.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக