முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சந்திப்பில் முந்தியவர்

 




சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர். 

சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை  அவருக்கு  எப்படித்  தெரியும்?  என்ன  பேசுவது?  போன்ற சில கேள்விகள் என்னைச் சுற்றிக்கொண்டிருந்தன. அதுதான் நான் முதல் முறையாக தனியாக அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நேரம். எனவே, அந்த ஊழியர் அறையினுள் வந்து சகோதரர் தினகரனிடம் என்னை அறிமுகப்படுத்திச் சென்றிருக்கலாமே என்று யோசித்துக்கொண்டிருந்த நான், மெல்ல அறைக் கதவினைத் திறந்தேன், அறையில் எந்தப் பக்கம் அமர்ந்திருப்பார்? என்ற எண்ணத்தோடு,  தலையினை  உள்ளே  நுழைத்துப்  பார்த்தபோது,  அறையினுள்  இருந்த  சகோதரர்  தினகரன்,  வயதான  நிலையிலும்,  இருக்கையிலிருந்து  மெல்ல எழுந்தவண்ணம், இரு கரங்களையும் கூப்பியவாறு 'ஸ்தோத்திரம் தம்பி' என்று  சிரித்த  முகத்துடன்  வரவேற்றார்;  பின்னதாகவே  நான்  'ஸ்தோத்திரம்'  என்று  சொன்னவாறு  அவரை  ஏறிட்டுப்  பார்த்தேன்;  முதலில்  நான்  அல்லவா  சொல்லியிருக்கவேண்டும்,  இத்தனை  வயதானவராக,  பெலவீனமுள்ளவராக  இருந்தபோதிலும்  இருக்கையிலிருந்து  அவர்  எழும்பவேண்டியது  அவசியமா?  என்று அவர் முந்திக் கொண்ட காரியங்களைக் குறித்து என் மனம் சிந்திக்கத் தொடங்கியது. அவரைத் தவிர அறையில் வேறு யாரும் இல்லை. முதன் முதலாக அறையில் நேரடியாகப் பார்த்த அனுபவத்தில் பேசுவதற்கு ஒன்றும் இல்லாதவனைப் போல, அருகில் சென்று முழங்கால் படியிட்டு ஜெபித்துவிட்டு, திரும்பி வந்தேன். இரண்டு முறை அறையில் அவரை தனியே சந்தித்தபோதும் முந்திக்கொண்டவது அவரே. கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். (ரோம 12:10) என்ற சத்தியத்தை அவருடனான சந்திப்பு எனக்குக் கற்றுக்கொடுத்தது. 

மற்றொருமுறை,  சென்னை  மெரீனா  கடற்கரையில்  'இயேசு  அழைக்கிறார்'  கூட்டங்கள்  நடைபெற்றுக்கொண்டிருந்தது,  அன்றைய  நாட்களில்  நிலவிய  சூழ்நிலையின் நிமித்தமாக, காவல்துறை பாதுகாப்பு வாகனங்களுடன் ஒவ்வொரு நாளும்  கூட்டத்தி;ற்கு  வந்தார்  சகோதரர்  தினகரன்.  எல்லா  கூட்டங்களிலும்  தவறாது சென்றுவந்தேன். கடைசி நாள் கூட்டம் முடிந்ததும், மேடையிலிருந்து அவர்  புறப்பட  ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்.  அவரது  வாகனம்  மேடைக்கு  அருகே  கொண்டுவரப்பட்டது.  மேடையிலிருந்த  ஊழியர்களுடன்  பேசிவிட்டு,  உதவியாளர்களின்  உதவியுடன்  மேடையை  விட்டு  இறங்கிக்கொண்டிருந்தார்.  சகோதரருக்கு  எப்படியாவது  கைகொடுத்துவிடவேண்டும்  என்ற  ஆசையில்  மேடைக்கு  அடியில்,  அவரது  வாகனத்திற்கு  அருகில்  நின்றுகொண்டிருந்தேன்.  என்றபோதிலும், சகோதரர் வாகனத்தில் ஏறும்போது, அவரைச் சந்திக்க விடாமல் காவல்துறையினர் மறித்துக்கொண்டனர். வாகனத்தில் ஏறிய சகோதரர், அருகில் நின்றுகொண்டிருந்த அநேகரைப் பார்த்து கையசைத்துக்கொண்டிருந்தார். கதவு அடைக்கப்பட்டு, வாகனம் புறப்பட்டு சுமார் பத்து அடி தூரம் மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. வாகனத்தின் உள்ளே சகோதரர் அமர்ந்திருந்தது கூட எனது கண்களுக்குத் தென்படவில்லை,   வாகனத்துடன்   நானும்   கையசைத்தவாறு   மெல்ல   நடந்துகொண்டிருந்தபோது, திடீரென வாகனத்தின் கண்ணாடி கீழே இறங்கியது சகோதரர் கரத்தை நீட்டினார், ஓடிச் சென்று அவருக்குக் கைகொடுத்தேன்.  சில விநாடிகளில் வாகனம் வேகமாகச் சென்றது. அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் என்னை  வித்தியாசமாகப்  பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  இதனைக்  கண்ட  காவல்துறையினர், ஓடிவந்து என்னை இழுத்தனர், கண்டித்தனர்; நீங்கள் யார்? என்று  கேட்டவாறு,  இப்படிச்  செய்யக்கூடாது  என்று  கடிந்துகொண்டனர்.  நான்  அல்ல,  சகோதரர்தான்  கண்ணாடியை  கீழே  இறக்கி  கைகொடுத்தார்  என்று  காவல்துறையினரிடம் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தேன். பலத்த பாதுகாப்பின் மத்தியிலும், தானே கரம் நீட்டினதினாலேயே அன்று அச்சந்திப்பு சாத்தியமாயிற்று என்பது இன்றும் என் நினைவில் நிற்கும் நிகழ்வு. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...