சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
மரித்தும் பேசுகிறேன்!
2014, ஏப்ரல் மாதத்தின் ஓர் நாள், ஜெம்ஸ் வளாகத்திலுள்ள தனது வீட்டிலிருந்து ஜெம்ஸ் வளாகத்திலுள்ள ஜெம்ஸ் வேதாகமக் கல்லூரியின் அருகிலே நடந்துவந்துகொண்டிருந்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார். தற்செயலாக சகோதரரை வழியில் சந்தித்த நான், வணக்கம் சொல்லியதைத் தொடர்ந்து, www.youthline.in இணையதளத்தின் 'Encounter' என்ற பகுதியில் அவரைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும் தகவல்களைச் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். 2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாட்களிலிருந்து பல்வேறு காரியங்களை உங்களிடமிருந்து கற்றிருக்கிறேன். என்னோடு நீங்கள் கொண்ட உரையாடல்கள் பல பறந்துவிடாமல் இன்னமும் என் மனதோடு உறைந்து நிற்கின்றது. ஒருநாள் வீட்டில் அமர்ந்தவனாக, சகோதரரிடம் நான் பெற்றுக்கொண்ட காரியங்களும், கற்றுக்கொண்ட காரியங்களும் எனக்கு மட்டுமா? என்ற கேள்வி எனக்குள் உண்டாக, உலகிற்கும் அதனை வெளிப்படுத்த விரும்பினேன்; அதன் விளைவாக 'Encounter' என்ற பெயரில் இணையதளத்தில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டுவருகின்றேன் என்றேன். எனது விருப்பத்தினையும், உற்சாகத்தினையும், பரந்த நோக்கத்தினையும் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த சகோதரர் என்ன சொல்லப் போகின்றார் என்பதைக் கேட்க ஆயத்தமாயிருந்த வேளையில், சகோதரர் மெல்ல என்னை நோக்கி, 'மரித்தும் பேசுகிறேன்' என்று சிரித்தவாறு இரு வார்த்தைகளை மாத்திரம் உதிர்த்துவிட்டு, தனது நடையைத் தொடர்ந்தார். உயிரோடு இருக்கும் ஒரு நபர் 'மரித்தும் பேசுகிறேன்' என்று சொல்லிய இந்த வார்த்தைகளின் கருத்துக்கள் எனது சிந்தையை சில மணி நேரமாகச் சுற்றிக்கொண்டேயிருக்க, மரித்தாலும் அவரை பேசவைக்கும் பணியினையே நான் செய்துகொண்டிருக்கிறேன் என்ற மனநிறைவுள்ளவனாக மாறினேன். மரித்தாலும் பேசவேண்டும் என்ற மனமுடைய மனிதர் இவர் என சகோதரை அப்போது நான் அடையாளம் கண்டுகொண்டேன். அடுத்தநாள் அலுவலகம் சென்றபோது, அவரைக் குறித்து எழுதியிருந்த குறிப்புகள் பலவற்றை பிரிண்ட் எடுத்து அவரது கையில் கொடுத்தேன். சந்தோஷத்துடன் அதனைப் பெற்றுக்கொண்டார். ஒருவன் உண்டதை, உலகம் மென்று திண்ணட்டுமே என்ற ஆசை எனக்கு. மரித்தும் பேசவேண்டும் என்ற ஆசை உண்டா உங்களுக்கு.
www.sinegithan.in
Comments
Post a Comment