சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
சரியாச் செய்தீங்க
ஜார்க்ண்ட் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர் என்னுமிடத்தில் படைமுயற்சிக் கூட்டங்கள் நடைபெறவிருந்தன. அப்பகுதியின் சபையைச் சேர்ந்த மூத்தோரும், போதகரும், விசுவாசிகளும் இணைந்து அக்கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். அந்நாட்களில், படைமுயற்சிக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாக நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். எனவே, கூட்டம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே குழுவினரோடும், ஜெனரேட்டர் பொருந்திய பேருந்தோடும் அப்பகுதிக்குச் நாங்கள் சென்றிருந்தோம். கூட்டம் தொடங்கியது, ஜனங்கள் திரளாக வந்து தேவ வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தனர். பிசாசின் பிடியிலிருந்த பலர் அப்போது விடுதலையும் பெற்றனனர். கூட்டம் நடத்துவதற்காக மின்சார இணைப்பு ஏதும் கிடைக்காததினால், நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் மூலமாகவே கூட்டத்தினை நடத்திக்கொண்டிருந்தோம். இறுதி நாள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஜெனரேட்டர் திடீரென பழுதானது; ஜெனரேட்டரின் டீசல் தொட்டியிலிருந்து எஞ்சினுக்கு வரும் டீசல் திடீரென அளவு குறையத் தொடங்கியது. காரணத்தை அறிய முற்பட்டபோது, இடையில் உள்ள பில்டரில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அப்போது எங்களிடத்தில் மாற்று பில்டரும் இல்லாதிருந்தது. ஜெனரேட்டர் வாகனத்தை ஓட்டிவந்தவரும், ஜெனரேட்டரை இயக்கிக்கொண்டிருந்தவருமான ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் அகஸ்டின் (அகஸ்டின் ஜெபக்குமார் அல்ல, மீடியா துறையின் ஊழியர்) ஜெனரேட்டரில் உண்டான பழுதினை என்னிடம் தெரிவித்தார். ஒரு சில நிமிடங்கள் அவர் தனது கைகளால் பம்ப் செய்தவாறு ஜெனரேட்டரை இயக்கிக்கொண்டிருந்தார். அந்த ஊழியர் என்னிடத்தில், 'கிருபாகரன் அண்ணன், என்ன செய்யலாம் சொல்லுங்க' என்று கேட்டார். ஜெனரேட்டர் நின்றுவிட்டால் கூட்டம் முழுவதும் தடைபட்டுவிடும், பில்டர் இல்லாமல் ஜெனரேட்டரை ஓட்டினால், ஜெனரேட்டரின் எஞ்சினே பழுதாகிவிடும் நிலை ஏற்படும், அது மிகுந்த செலவை உண்டாக்கிவிடும். ஜனங்களோ ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள், சகோதரர் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார். இதனைக் கண்ட நான் பில்டர் இல்லாமல் ஜெனரேட்டரை ஓட்டும்படி சொன்னேன். அப்படியே கூட்டம் முடியும் வரை ஜெனரேட்டர் ஓடியது. கூட்டத்தின் முடிவில், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்த நான், 'அண்ணன், ஜெனரேட்டர் பழுதாகிவிட்டது, எனவே செய்யக்கூடாத ஒன்றை அப்போது செய்துவிட்டேன், கூட்டம் தடைபட்டுவிடக்கூடாது என்றுதான் அப்படிச் செய்தேன்' என்று சொன்னேன். அப்போது சகோதரர், 'கிருபா, நீங்க சரியாகச் செய்தீங்க, அப்படித்தான் செய்யவேண்டும், சூழ்நிலையினைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்' என்று சொன்னார். சகோதரரின் குறி ஜனங்கள் மீதுதான், ஜெனரேட்டர் மீது அல்ல என்பது எனக்கு அப்போது தென்பட்டது.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக